*அஞ்சலக சேமிப்பு குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு அறிக்கை தயாரித்து ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை*
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலமாக 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் SCOPE (Specific concept oriented programme) என்ற திட்டமானது பதினொன்றாம் வகுப்பில் உள்ள கணிதம் இயற்பியல்,வேதியியல்,தாவரவியல்,விலங்கியல்,வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய ஏழு பாடங்களில் கரூர் மாவட்ட உட்பட தமிழக அளவில் இந்தியாவிலேயே முதல் முறையாக
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்களை கள ஆய்வின் மூலமாகவும், புதிய கண்டுபிடிப்புகள் மூலமாகவும் கற்றுக்கொள்வதே இதன் முக்கிய நோக்கம். இந்த திட்டத்தின் முக்கிய பகுதியான மாணவர்கள் தங்களின் பாட ஆசிரியர்கள் மூலம், தாங்களாகவே தயாரித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்து விளக்கும் நிகழ்வானது கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் நடந்தது.
இதில் ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவில் பயிலும் மாணவர்கள் அஞ்சலகத்தில் உள்ள பல்வேறு சேமிப்பு முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆய்வு அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்தனர். மதிப்ப்பெண்களுக்காக அல்லாமல் மக்களிடையே அஞ்சலகத்தில் சேமிக்கும் பழக்கத்திற்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும் இந்த ஆய்வறிக்கை அடுத்த வாரம் திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில் கலந்துகொள்ள கரூர் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து ஆய்வு குழு தலைவர் மாணவர் கோகுலகிருஷ்ணன் கூறுகையில் ”இந்தியாவின் உயிர்நாடி கிராமம். அந்த கிராமப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக அஞ்சலகங்கள் ஒரு காலத்தில் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் மாற்றங்கள் காரணமாக அஞ்சலகங்களை மக்கள் இன்று நாடுவதில்லை. அஞ்சலகங்கள் புத்துயிர் கொடுக்கும் வகையிலும் கிராமப்புற மக்கள், எங்களைப்போன்ற மாணவர்களிடையே அஞ்சலக சேமிப்பு முறைகள் குறித்து மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கங்களுக்காகவே இந்த தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்து இருக்கிறோம். மதிப்பெண்கள் என்பதைத் தாண்டி வணிகவியல் பாடத்தை ஆர்வமுடன் கற்பதற்கு எங்களுக்கு இந்த SCOPE ஆய்வு தூண்டுகோலாக அமைந்துள்ளது என்றார்.”
மேலும் இந்த இந்த ஆய்வு வழிகாட்டியும், ஏற்கனவே தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற வணிகவியல் ஆசிரியருமான கார்த்திகேயன் கூறுகையில்” பள்ளி கல்வித்துறை முன்னெடுத்திருக்கும் இந்த முன்னோடி திட்டமானது பள்ளிகளில் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவித்து,அவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை தூண்டி,பாடத்தில் முழு கவனத்தை செலுத்த தூண்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் மனப்பாடம் செய்து மட்டுமே எழுத வைக்காமல் பாடத்தைப் புரிந்துகொண்டு மாணவர்கள் தேர்வை எழுதும் வகையில் இந்த SCOPE திட்டம் அமைந்துள்ளது”என்றார்.
’
மாணவர்கள் தயாரித்த இந்த ஆய்வறிக்கை கரூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திரு கலைக்குமார் அவர்களிடம் ஒரு பிரதி வழங்கப்பட்டது.
இந்த ஆய்வறிக்கை குறித்து அவர் கூறுகையில்”அஞ்சலகங்களில் சேமிப்பதற்கு மக்கள் எதிர்பார்க்கும் வசதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த ஆய்வறிக்கை தெளிவாகக் கூறுகிறது.அஞ்சலகங்கள் புத்துயிர் பெறுவதற்கு இது போன்ற ஆய்வுகள் உதவும்.பள்ளிக்கல்வித்துறையின் இது போன்ற புத்தாக்க முயற்சிகளுக்கு வாழத்துகள்.”என்றார்.
No comments:
Post a Comment