FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

4 February 2019

366 அங்கீகாரம் இல்லாத, தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு இயக்குனரகம், 'நோட்டீஸ்'

சென்னை: அங்கீகாரம் இன்றி செயல்படும், 366 பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு, பள்ளி கல்வி இயக்குனர், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளார்.தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளும், தமிழக அரசின் பள்ளி கல்வி துறையிடம், ஆண்டுதோறும் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என, பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் உத்தரவிடப்பட்டு உள்ளது.அதேபோல, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படியும், அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் இயங்கக் கூடாது.இந்நிலையில், தமிழக மெட்ரிக் இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கீழ், பல பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக, புகார் எழுந்துள்ளது. இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவுப்படி, மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட்டது.அதில், அரசு உதவி மற்றும் சுயநிதி பிரிவில், 366 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி செயலர் மற்றும் தாளாளர்கள் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.நோட்டீசில் கூறியிருப்பதாவது:அனைத்து பள்ளிகளும், சம்பந்தப்பட்ட அரசு துறைகளில், முறையான அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் இன்றி பள்ளியை நடத்துவதும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் நடத்துவதும், விதிகளை மீறிய செயல்.அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், விதிமீறலுக்காக, 1 லட்சம் ரூபாயும்; பள்ளியை நடத்தும் ஒவ்வொரு நாளுக்கும், தினமும், 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.அத்துடன், பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.எனவே, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள், தங்கள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என, 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிகளின் செயல்பாடுகளை நிறுத்துவது உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment