FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 February 2018

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமே விபத்து காப்பீட்டின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமே விபத்து காப்பீட்டின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, துறையின் செயலாளர் பிரதீப் யாதவ் அண்மையில் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-



தமிழகத்தில் 37 ஆயிரத்து 201 அரசுப் பள்ளிகளும், 8 ஆயிரத்து 402 அரசு உதவி பெறும் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. 



இந்தப் பள்ளிகளில் 55 லட்சத்து 73 ஆயிரத்து 217 மாணவர்களும், 29 லட்சத்து 51 ஆயிரத்து 84 மாணவியர்களும் பயின்று வருகிறார்கள். இந்த மாணவ-மாணவிகள் அனைவரும் விபத்து காப்பீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.



 எந்தெந்த சூழல்கள்: பள்ளி மாணவ-மாணவியர்கள் தங்களது பள்ளிக் கல்வி வாழ்க்கையில் பல்வேறு விபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.



மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போது ஏற்படும் விபத்து, கல்விச் சுற்றுலா செல்லும் போது ஏற்படும் விபத்து, நாட்டு நலப் பணித்திட்டம், தேசிய மாணவர் படை, இளம் செஞ்சிலுவைச் சங்கத்தினர், பாரத சாரண-சாரணியர் இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக நடைபெறும் முகாம், பேரணிகளில் கலந்து கொள்ளும் போது ஏற்படும் விபத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது ஏற்படும் விபத்து, மின்கசிவு மற்றும் ஆய்வகங்களில் ஏற்படும் விபத்து, விஷ ஜந்துகளால் நிகழும் விபத்து, விடுமுறை நாள்களில் வெளியே செல்லும் போது நீர்நிலைகளால் ஏற்படும் விபத்து போன்றவற்றை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.



இந்த விபத்துகளைச் சந்தித்து மரணமடையும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சமும், பலத்த காயம் அடைவோருக்கு ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் அடைந்த மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணத் தொகை அளிக்கப்படும்.



 இந்தத் தொகையானது மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment