நன்றி:தினகரன்
நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர் காலியிடங்கள் விபரங்களை சேகரிக்கும் பணியில் கல்வித்துறை ஈடுபட்டு வரும் நிலையில் கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தை மையமாக வைத்து அனைவருக்கும் இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 201112 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு அச்சடித்த கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் கிடப்பில் போடப்பட்டன. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால், தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எண்ணி, பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை அதிகளவில் படித்தனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதிநேர வேலைகூட வழங்கவில்லை. தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்கள் வேலை இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 2006ம் ஆண்டில் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பாடப்பிரிவு இல்லை.
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க வேண்டும் என பி.எட் கணினி அறிவியல் படித்த ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் உள்ள கணினி பாட பிரிவுகள், கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, பணியிடம் அனுமதிக்கப்பட்ட விபரம், பணிபுரியும் கணினி பயிற்றுநர்கள் விபரம், கணினி பயிற்றுநர்களின் காலி பணியிட விபரம், பணியிடம் அனுமதிக்கப்பட்ட அரசாணை போன்ற விபரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், புதிதாக கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் நடப்பு கல்வியாண்டில் நியமனம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. எனவே விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படலாம் என்று கணினி ஆசிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெ.குமரேசன்,
9626545446 ,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சஙகம்.
No comments:
Post a Comment