FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 January 2017

நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 130 மி.மீ., ராமேசுவரத்தில் 110, காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 80 மி.மீ. வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய இடங்களில் 70 மி.மீ. மழையும் பெய்துள்ளது.இதுதவிர திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, திருவள்ளூர், வேலூர், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி, நாகப்பட்டினம், பெரம்பலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேற்கு திசையில் நகர்ந்து தற்போது கன்னியாகுமரியில் இருந்து கொங்கன் கடற்பகுதி வரை பரவியுள்ளது.இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்யக்கூடும். 

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடதமிழகம், புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment